
Quran in Tamil
An-Nâziʽât
அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[79:1]
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
[79:2]
(நல்லோர் உயிர்களை) இலோசாகக்கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
[79:3]
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
[79:4]
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
[79:5]
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
[79:6]
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
[79:7]
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
[79:8]
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
[79:9]
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
[79:10]
நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா? என்று கூறுகிறார்கள்.
[79:11]
மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?
[79:12]
அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும் என்றும் கூறுகின்றார்கள்.
[79:13]
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
[79:14]
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
[79:15]
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
[79:16]
‘துவா‘ என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
[79:17]
நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.
[79:18]
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; “பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.
[79:19]
அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய் (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
[79:20]
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
[79:21]
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
[79:22]
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
[79:23]
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
[79:24]
நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் – ரப்புக்குமுல் அஃலா என்று (அவர்களிடம்) கூறினான்.
[79:25]
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
[79:26]
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
[79:27]
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
[79:28]
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
[79:29]
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
[79:30]
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
[79:31]
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
[79:32]
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
[79:33]
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
[79:34]
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
[79:35]
அந்நாளில் மனிதன் தான்முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
[79:36]
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
[79:37]
எனவே, எவன் வரம்பை மீறினானோ –
[79:38]
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
[79:39]
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
[79:40]
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
[79:41]
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
[79:42]
(நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி – அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக்கேட்கிறார்கள்.
[79:43]
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
[79:44]
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
[79:45]
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
[79:46]
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்)தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.